Saturday 13 August 2011

இரு வருடத்திற்கு முன்னர் இருந்த மனநிலை மீண்டும் எம்முள்.....

மர்மம் தலை நிமிர்ந்து வீர நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் அச்சத்தின் மத்தியிலேயே மக்கள் வெளியில் செல்ல வேண்டிய சூழல் இன்று உருவாகியுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் இருந்த சூழலை தற்போதைய நாட்களில் நான் காண்கின்றேன்.

மீண்டும் இப்படியான ஒரு சூழல் உருவெடுக்காது என பல தரப்பினரும் நம்பி தமது முன்னேற்ற பாதையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கும் காலத்தில், முதுகின் பின்னால் இருந்து தாக்குவது போல மர்ம மனிதர்களின் தாக்குதல்கள் தற்போது அதிகரித்து செல்கின்றது.



மர்ம மனிதர்களின் தாக்குதலில் இதுவரை எவரும் உயிரிழக்காத நிலையில், பொலிஸார் மற்றும் பொதுமக்களின் தாக்குதல்களிலேயே அப்பாவி நபர்கள் உயிரிழக்கின்றனர்.

எனது முன்னைய பதில் நான் கூறியிருந்ததை போல காஹவத்தை பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளை மையப்படுத்தி சிலர் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.

இவர்களின் நோக்கம் என்னவாக தான் இருக்கும்?



இந்த மர்ம மனிதர்களின் பின்னணி குறித்து அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரச தரப்பினரை நோக்கி தனது விரலை நீட்டியிருந்தனர்.

பொலிஸாரின் அசமாயப்போக்கே மர்ம மனிதர்களின் நடமாட்டத்தின் பின்னணி என இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண பொத்துவில் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.



எது எவ்வாறு இருந்தாலும், கடந்த 30 ஆண்டுகள் இடம்பெற்றுவந்த யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு இரு ஆண்டுகளே முடிவடைந்துள்ள நிலையில், மீண்டும் இப்படியான ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் 3 தசாப்தங்கள் இடம்பெற்றுவந்த யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே, மீண்டும் இந்த மர்ம மனிதர்களின் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தினை எதிர்க்கட்சிகளின் உறுதியான நிலைப்பாட்டினால் தளர்த்த வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ள இத்தருணத்தில், இவ்வாறான அச்சத்துடன் கூடிய அசாதாரண சூழ்நிலை தொடர்வதனால் அவசரகாலச் சட்டத்தினை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அவசரக்காலச் சட்டம் அமுலில் இருக்குமானால் ஒருமித்த மனதுடன் எவ்வாறு வெளியில் செல்வது.......



எத்தருணத்திலும் யாரையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள பாதுகாப்பு தரப்பினருக்கு முழு அதிகாரம் உள்ளதனால், அச்சம் எமக்கு தான்......

அவசரக்காலச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்குமா? என்ற கேள்வி ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொருவரின் மனதிலும் எழுந்த வண்ணமே உள்ளமையை யாராலும் மறுக்க முடியாது........ ஆனால் மறைக்க முடிகின்றது அல்லவா!


பொத்துவில் பிரதேசத்தில் மர்ம மனிதனின் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணின் படம்....




நன்றி அததெரண

Wednesday 10 August 2011

மர்ம மனிதனின் நோக்கம்..... மர்மம்

திரைப்படத்தில் பார்த்த அந்நியனா இவன்? அல்லது பெண்களை தொடரும் ஆவியா இவன்?

பதில் தெரியாது இன்று பல கேள்விகளுடன் உலாவிவரும் பொதுமக்கள் ஒருபுறம் இருக்க, நடப்பது என்னவென அறியாத பாதுகாப்பு பிரிவினர் மறுபுறத்தில் அச்சத்துடன் பாதுகாப்பில் இருக்கின்ற நிலையில் ஊடகவியலாளர்களாகிய எமது நிலையோ...... பரிதாபம்.......



நடப்பது தொடர்பில் பல்வேறு தொலைபேசி அழைப்புக்கள் அலுவலகத்திற்கு மாத்திரம் அல்லாது, எமது கையடக்கத் தொலைபேசிக்கும் தொடர்ச்சியாக வந்த வண்ணமே உள்ளன.

ஊடகவியலாளர்களுக்கும் இதுவரை இந்த சம்பவம் தொடர்பான சரியான தகவல்கள் கிடைக்காத நிலையில் நாங்கள் மக்களின் கருத்துக்களையும், பாதுகாப்பு பிரிவினரின் கருத்துக்களையும் மாத்திரமே வெளியிட்டு வருகின்றோம்.

கிறீஸ் மனிதன் என அழைக்கப்படும் மர்ம மனிதன் யார்......?

இதற்கான பதில் என்னிடம் உள்ளது.....

இரத்தினபுரி காஹவத்தை பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பெண்களின் கொலைகளை அடுத்தே இந்த மர்ம மனிதன் உருவெடுத்தான்.

மனநிலையால் பாதிக்கப்பட்டவரினாலேயே இவ்வாறான கொலைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரிவினர் அறிவித்திருந்த போதிலும், அதனை நான் நம்பவில்லை.



இந்த சம்பவத்தின் பின்னணியில் ஏதோ ஒரு மர்மம் இருக்கின்றது என்பதனை அறிந்த நான், தனிப்பட்ட ரீதியில் யாருக்கும் தெரியாதவாறு இது தொடர்பாக ஆராய்ந்தேன்.

ஆம், நாட்டில் உலாவரும் மர்ம மனிதன் உண்மை என்பதனை என்னால் அறிய முடிந்தது.

காஹவத்தை சம்பவத்தில் காணப்பட்ட அச்ச நிலையை பயன்படுத்திய சிலர் குழுக்களாக திரண்டு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்படியான நிலையில் ஏன் பொருட்களை கொள்ளையடிக்காது பெண்களையே துன்புறுத்தி வருகின்றனர் என்ற கேள்வி உங்கள் மனதில் தற்போது உருவெடுத்திருக்கும்.

ஒருபுறம் பெண்களை பாதுகாப்பதற்கான ஆண்கள் வீதியில் இறங்கி பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டுள்ள நிலையில், திருடர்களின் கைவண்ணம் சரியாக இடம்பெற்றுகின்றன.

இந்த சம்பவங்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் சற்று உன்னிப்பான அவதானித்து பார்த்தால் நான் கூறுவதின் உண்மை தன்மை புரியும் என நினைக்கின்றேன்.



இது மர்ம மனிதனின் காலம்...... மர்ம மனிதனை தவிர எமது சகோதரர்கள் அப்பாவி ஆண்களின் மீதே தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அப்பாவி ஆண்கள் யார் முகத்தில் காலையில் விழித்தார்களோ தெரியவில்லை. தாக்குதல் சற்று பலமாகவே உள்ளது.

மர்ம மனிதனின் நடமாட்டம் உண்மை? அவர்களின் நோக்கம் பெண்கள் அல்ல.... பெண்களை மையப்படுத்திய கொள்ளை...

தயவு செய்து பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக கூறி ஆண்கள் வீதியில் இறங்கி நேரத்தை வீணடிக்க வேண்டாம். வீட்டிற்குள் இருந்தால் அதுவே பெண்களினதும், சொத்துக்களினதும் பாதுகாப்பாக அமையும் என்பதனை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்..

மர்ம மனிதனின் நோக்கம் சரியாக நிறைவேறுகின்ற போதிலும், காவலர்களின் நோக்கமோ அப்பாவி ஆண்களின் மீதே..............



தொடருமா மர்மம்........ நிச்சயம்.......